Blog Archive

Sunday, December 28, 2008

பூமி ஆளலாம்.
















Posted by Picasa
இன்னுமொரு மார்கழி.இன்னுமொரு வருடம்.
இன்னுமொரு பதிவு.
இன்னுமொரு சுனாமி நாள்.
இன்னும் இந்தக் கடலைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

உன்னைச் சொல்லி என்ன பயன். எய்தவன் யாரோ.
நீ வலியால் தூண்டப்படே கரையைத் தாண்டினாய் கடலே.
எத்தனை அழியாத நினைவுகளைக் கொடுத்து இருக்கிறாய். எத்தனை ஆனந்தமான சாயங்காலப் பொழுதுகளை நாங்கள் உன் மணலில் கழித்திருக்கிறோம்.
மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கத்தெரிந்த உன்னைக் கரை மேல் ஏவிவிட்டது யார்.

இத்தனை கேள்விகள் என்னுள் எழுந்தன நேற்று மெரினாவில் நடந்த போது.
டிசம்பர் மாதக் காற்று இதமாக இருந்தது.
கடல் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் பயமாக இல்லை.
வங்கக் கடல் எனக்குத் தெரிந்த சிலரையும் உள்ளே வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அவர்களை நினைப்பதற்காக, மானசீகமாக அவர்களிடம் பேச நான் கடலின் கரைக்கு வருவேன்.

இதெல்லாம் பழைய கதை,இனிப் புது ஆண்டு வரப்போகிறது. புது நினைவுகளையும் ,புதுக் குழந்தைகளையும்,புதுப் பதிவுகளையும்,திண்ணிய எண்ணம் கொண்ட மனிதர்களையும் அடையாளம் காட்டப் போகிறது.
நல்லதே நடக்கட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஹாப்பி நியூ யியர் 2009.

Wednesday, December 24, 2008

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
புத்தாண்டு வருகிறது. தயாராகுங்கள்





இது நானே பரிசோதித்துத் தயார் செய்த புத்தாண்டு வாழ்த்து.:)
ஒவ்வொரு வருடமும் நினைப்பது உண்டு.
என்ன செய்தோம். திட்டமிட்டோமா.
மற்றவர் திட்டப்படி நடந்தோமா என்று யோசித்தால்,
அது மற்றவர்கள் கைகாட்ட நான் நடந்திருக்கிறேன்.
அதுதான் உண்மை.
இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு திரும்பினால் மற்ற மாடும் திரும்ப வேண்டியதுதானே.
அதனால் குழப்பம் இல்லாமல் வண்டி ஓடும்.
இறைவன் எல்லா விதத்திலும் கருணையோடு நடத்தி வந்திருக்கிறான்.
பாதுகாவல் கொடுத்து இருக்கிறான்,.
மேலும் நட்புகளை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து
செய்து கொடுத்து இருக்கிறது இணையம்.
எத்தனை விதமான எண்ணங்கள்!!!
நினைப்புகள்
கணிப்புகள்,
கவிதைகள்,
எல்லாவற்றுக்கும் மேலான நட்புகள்.
அனைவரும்
நோய் நொடி இல்லாமல், ஆரோக்கியமாக, உற்சாகத்தோடு,குடும்பத்தோடு, குழந்தைகளோடு,
இருக்க வாழ்த்துகள்.
நல்லதொரு புத்தாண்டு நம்மை நோக்கி வருகிறது.
அந்த ஒளி வழியில் நாம் நடந்து கொண்டாடுவோம்.

Tuesday, December 23, 2008

தூமணி மாடம்










இன்று தூமணிமாடத்து நாள்.
ஒன்பதாம் திருப்பாவை.
இதுவும் பத்தாம் பாவைப் பாடலான நோற்றுச் சுவர்க்கமும் இரண்டு தடவை சேவிக்க வேண்டும் என்று பெரியோர் சொல்வார்கள்.
மார்கழி விசேஷம் பேசும் பதிவுகள் கேஆரெஸ் ,குமரன் என்னும் பண்பான பதிவர்கள் ஆன்மீகத்தோடு சொல்லும் வார்த்தைகள் இருக்கும் போது
நானும் மீண்டும் எழுத என்ன இருக்க முடியும்.
பாட்டைத்தான் கொடுக்க வேண்டும்.
பார்த்தால் அங்கே ஆண்டாளின் தோழியின் வீடு தெரிகிறது. அதிலோ ஒரு மணிக்கதவம்.
விழித்திருப்பது பெண்ணின் தாயார் மட்டுமே.
பாடலின் நாயகியோ மார்கழிப் பனிக்குத் துணையாக வடபத்ர சாயி யினை நினைத்துக் கொண்டு அவன் தந்த ஆதரவிலே அழகாகத் துயில்கிறாள்.
அவள் படுத்திருக்கும் இடமோ தூ...மணி...மாடம்.சுற்றும் விளக்குகள் எரிகின்றனவாம். தூபம் கமழ்கிறதாம்.

இந்த மாதிரி மென்மையான காலையில் இருளும் ஒளியும் கலந்த வேளையில்
இவளுக்கு மட்டும் ஒளி நடுவே எப்படித் தூக்கம் வருகிறது.
நாமோ நோன்பெடுத்துவிட்டோம். கேசவனைப் பாட. இவளுக்கு யாராவது ஏவல் வைத்துவிட்டார்களா.
சொப்பனத்தில் கண்ணனைக் கண்ட மயக்கத்தில் இன்னும் கண் திறக்க முடியாமல், ஊமையாய் உறங்குகிறாளா.

கண் திறந்தால் கண்ணன் ஓடிவிடுவான் என்ற பயமாக இருக்க வேண்டும். அதுதான் என்று தீர்மானித்த ஆண்டாளும் தோழியரும், பெண்ணின் அம்மாவை விளித்து,
மாமீர்! உங்கள் மகளை எழுப்புங்கள், மாதவனைப் பாட வேண்டும்,
அவன் கோவில் நாட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
அவளும் எழுந்துவிடுவாள். அவர்களும் சேர்ந்து இன்னோரு பெண்ணை எழுப்பப் போவார்கள்.
என்ன ஒரு இனிமையான காலம்.
இப்போதோ இன்றொ நானும் இருக்கிறேன்.
மார்கழிக்கு என்று ஒரு கோலமும், இரு விளக்குகளும்தான் வாசலில் அத்தாட்சி.
இழைகளை இழுத்து முடிக்கவும், ஜயா,விஜய்,பொதிகை,ராஜ் டிவி என்று ரிமோட்டை அழுத்தி மார்கழி உபன்யாசங்களைக் கேட்டு விட்டு,
இன்னோரு காப்பியும் குடித்துவிட்டு, இதோ இணையத்துக்கு வந்தாகிவிட்டது.
நேற்றுதான் இந்தத் தமிழ்மணம் வரலாமா வேண்டாமா என்று யோசித்தது இன்று
ஆண்டாளின், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் தயவில் வலை ஏற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ்மணம் இன்னும் என் இணையத்தில் தெரியவில்லை.
படிக்க முடிந்தவர்கள் கருத்துச் சொல்லுங்கள்.

அன்னவயல் புதுவை ஆண்டாள்
அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
பாடிக்கொடுத்தாள்,
நல்பாமாலைச் சூடிக்கொடுத்தாள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே வாழிய நீ பல்லாண்டு.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.





Posted by Picasa

Monday, December 15, 2008

வந்தோம்ம்ம்ம்








இருபத்தேழு கிலோவோட எமிரேட்ஸ் வண்டி ஏறினோமா. அதுல ரொம்ப முக்கிய விஷயம் சாப்பாடுதான். உண்மையாவே நல்லா இருந்தது.ரசிச்சுச் சாப்பிட்டேன்.சென்னை வந்துடுத்து.லக்கேஜ் கிடைக்க ஒரு மணி நேரம் ஆச்சு. கஷ்டம் ஆபீசர்கள் சிரித்துச் சந்தோஷப் படுத்தினார்கள்.:)
கிட்டத்தட்ட 50 படங்கள் ஆப்ஷன் கிடைச்சுது. ஒண்ணே ஒண்ணுதான் பார்த்தேன். நல்ல ஏர்லைன் தான். பாகேஜ் அதிகப் படுத்தினாங்கன்னா நல்லா இருக்கும்.



வீட்டுக்கு வந்தோம். பூட்டுத் திறக்க முடியவில்லை:)
மழையில் துரு பிடித்திருந்தது.
ஏற்கனவே
ஏற்பாடு செய்தபடி நீல்கிரீஸ் நெஸ்டில் இரு இரவுகள் தங்கள். டெலிபோன் கனெக்ஷன், டிவி கனெக்ஷன், இன்வெர்டர் ஆன் செய்தல். மளிகை பொருட்கள்.
அப்பாடி என்ன விலை.

வீட்டைத் திறந்ததும் தாக்கியது எலி நாற்றம்.
ஓஹோ இவங்க குடி வந்திருக்காங்களான்னு கேட்டு, ஜாக்கிரதையாக
ஒவ்வொரு அறையாகத் திறந்தோம்.
எதிர்பார்க்¸kaaத இடங்களில் அவை இறந்தே இருந்தன.
பிறகு தான் தெரிந்தது வேறு வீட்டில் வைத்த விஷத்தை உண்டு
இங்க வந்து இறந்திருக்கின்றன.:(
இதன் விபரீத பிற்பலன்களை எண்ணி இன்னும் பயமாக இருந்தது.
வீட்டின் மற்ற இடங்களையும் புத்தகங்களையும் ஒழித்துக் கொண்டு இருக்கிறோம்.
இணைய இணைப்பு நேற்றுதான் கிடைத்தது.
இதோ இன்றுவரையான விஷயங்களை எழுதியாச்சு.
இனிமேல்தான் மற்றவர்களின் பதிவுகளைக் கண்டு மகிழணும்.
எல்லோருக்கும் வணக்கம்.

Monday, December 08, 2008

சென்னையில் பதிவர்

வித விதமான சோழிகள், வாங்கி இருக்கலாமோ..
சூவனீர் கடை. நான் ஒரு பொம்மை கூட வாங்காமல் வந்தேன்:))

அட்லாண்டிஸ் அக்வாரியத்தில் சிற்பம்


முன்னைவிடப் பெருகிவிட்ட கட்டிடங்கள்








புர்ஜ் டவர்





எங்க மீனாட்சியோட அக்காவாம்.சொல்லித்து.






அட்லாண்டிஸ் முகப்பு



















Posted by Picasa
என்ன வாங்கிட்டுப் போகலாம்....
தலை குடச்சல் தாங்கலை.
பட்டியல் நீளம்.
வயதுகள் வித்தியாசம்.
தேவைகளூம் அதே.
ஏழு மாதங்கள் கழித்து பட்டினப் பிரவேசம் செய்தால்,
காட்டிருக்கும் வேலைகள் பிரம்மாண்டம்.
எண்பது பூர்த்தி செய்தவர்களிலிருந்து,புதிதாகப் பிறந்திருக்கும் ஒரு பாப்பா வரை ஏதாவது கொண்டு போகவேண்டும்.
பெண்களுக்கென்றால் நல்ல புடவை போதும்.

ஆண்களுக்குத்தான் யோசிக்க முடியவில்லை. நான் சொல்லும் நபர்கள்
வயதானவர்கள்.....வாசனைத்திரவியங்களைத் தவிர்ப்பவர்கள். எளிமையான பழக்க வழக்கங்கள்.
டி ஷர்ட் சரியாக இருக்கும். இல்லை என்றால் நடப்பதற்கான வாக்கிங் ஷூஸ்.
சரி அது ஓவர்.
சின்னக் குழந்தைகளுக்கு ஃபான்சியான காது,கழுத்து,கைகளுக்கான விஷயங்கள்.
நடுத்தரவயதுப் பெண்மணிகளுக்கு வாசனை செண்ட், கைப்பைகள்.
பாதாம்,முந்திரி,திராட்சை,குங்குமப்பூ இதுபோல வகையறாக்கள்.

சரி வாங்கியாச்சுனு முடிக்க முடியாது.

முனிம்மா கேட்ட குடை,செருப்பு இதுக்கெல்லாம் இடம் வேணும்.
அவங்க பேத்திகளுக்கு உடைகள்,தலைக்கு ஹேர்பாண்ட்,
பேரனுக்கு இரண்டு ரெடிமேட் உடைகள்.

சிங்கத்தோட பொட்டிக்குள் அவரோட கைவேலைக்கான ஆயுதங்கள்,பொம்மைகள் இத்தியாதி. .அய்யா மேல போட்டு இருக்கிற துணிமணியோட ப்போய் இறங்க வேண்டியதுதான்.
ஆனல் சினேகிதர்களுக்கான பேரிச்சம்பழம்,பாதாம் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு:)

எல்லாவற்றையும் வைத்து நிமிர்ந்தால் ,என் புடவைகளுக்கு இடமில்லை:)
எமிரட்ஸில் ஒரு பயணிக்கு 20 கிலோ தான் உண்டு.
கையில் 7 கிலோ.
அதற்குள் எனக்கு இரண்டு நாட்களுக்கு வேண்டும் என்கிற துணிமணிகளைப் போட்டுக் கொண்டாகிவிட்டது. மருந்துகளை அடைத்தாகி விட்டது.
போய் இறங்கினதும் ஒரு ஹோட்டலில் தங்கல்.
வீட்டை முழுவதும் சுத்தம் செய்த ப்பிறகு, கிரகப் பிரவேசம் செய்ய நினைப்பு.
கார்த்திகைக்கு அங்கே விளக்கேற்றலாம். கடவுள் கிருபையில்.

இன்னும் மழை இருக்காம். நாகைப் பட்டினத்திற்கு அருகே புயல் வந்து கொண்டிருக்கிறதாம். அதுகிட்ட சொல்லி இருக்கேன்.
அம்மா, தயவு செய்து எங்க ப்ளேன் தரை இறங்கற வரை மெல்ல வீசு. அப்புறமா வங்களவிரிகுடாக்குள் போயிடு''ன்னு.:)
பார்க்கலாம்.

Thursday, December 04, 2008

டிசம்பர் புகைப்படங்கள்









Posted by Picasa
புகைப்பட போட்டிக்குப் படங்கள் கிடைத்து விட்டன.
மூன்று படங்கள பதிவுக்குக் கொடுத்துட்டு,
ஒன்றைத் தெரிவு செய்து அனுப்பி விடவேண்டும்.

கடற்கரை நிழல்கள்











இவைகள், இங்கே துபாய் ஜுமைரா கடற்கரைக்குப் போனபோது எடுத்த படங்கள்.
மகன் எடுத்த படங்கள். அதனால் போட்டிக்கு அனுப்ப முடியாது:)
அப்போது அழகுக்காக எடுத்த வை. இப்போது நிழல்கள் தலைப்புக்கு
அருமையாக அமைகின்றன.



Friday, November 28, 2008

பாரத நாடு பழம் பெரும் நாடு,நாமதன் புதல்வர்

அமைதிப் புறாக்கள்
------------------------------------

கறுப்பு வெள்ளை சாம்பல்
வண்ணங்களோடு இரைதேடி
பறந்து அமர்ந்து ஓடி
அலையும் உங்களுக்கு
உங்கள் முன் ஒரு சமுதாயம் சீரழிவது தெரியவில்லையா.
வெடிகளும் குண்டுகளும் உங்களுக்குப் பழகி விட்டனவா.
சத்தமும் புகையும் கண்ணில் உறுத்தாத பரமானந்த நிலைக்கு நீங்கள்
சென்றிருக்க வேண்டும்.


இல்லையெனில் இந்திய நகரமொன்று அழுது கண்சிவந்து
நொந்து அலறித் துவளுகையில்,
புறாக்களே உங்களுக்கு அங்கே இரை தேட எப்படி முடிந்தது.
மனிதனின் கொடூரம் உங்களிடம் காற்றொடு சேர்ந்து கலந்து விட்டதோ.


காலம் மாறும்
நாங்களும் மனிதம் பெறுவோம்.
நீங்களும் அமைதிப் புறாக்களாகப் பறக்கப் பழகுவீர்கள்.
நொந்த உள்ளங்களுக்கு உங்கள் இறகுகளால்
அமைதி தூவுங்கள்.

Tuesday, November 25, 2008

பயணங்களில் தருணங்கள்

தாவரவியல் பூங்காவில் விட்டுப் போன முள்ளம்ப்ன்றி.


துபாய் மாலில் ஸ்டிங் ரே மீன்



செயிண்ட் லூயிஸில் சூவனீர் கடை. வாங்க முடியாத விலையில் படங்கள்:)




நம்ம ஊரு மண்பாண்ட சொப்பு, தக்ஷின் சித்ராவில வாங்கினது.





சிகாகோ மிருகக் காட்சி சாலையில் மஞ்சள் மர வரிசைகள்,.








தாவரவியல் பூங்காவின் மேலும் சில விற்பனைக்கான மரப் பொருட்கள்.





இந்தப் பருந்தாரின் படமும் விட்டுப் போச்சு.

இத்தனை கம்பீரத்தையும் இவரை ஓவியமாக்கிய அம்மாவின் முகத்திலும் பார்த்தேன். அவங்க ஒரு நேடிவ் இந்தியன்.








சீகாகோ வீட்டு வாசலில் இலை உதிர்க்கக் காத்திர்ருக்கும் வண்ண மரம்.









துபாய் மால், அக்வெரியத்தில் நீந்தும் சுறாக்கள்.










தங்கம் மற்றும் நாம் யோசிக்க முடியாத ப்ரெஷ்யஸ் கற்கள் விற்கும் அரங்கம். துபாய் மால்.


























Posted by Picasaபசுமை சுற்றி நிற்க சீக்கிரமே குளிர்காலத்துக்குத் தயார் ஆன ஆரஞ்சு மரம்.
---------------------------------------------------------------------------------------------
சிகாகோ மண் வாசம் முடிஞ்சு துபாய் வந்து ரெண்டு வாரமும் ஆச்சுது. முதல்ல அன்னியமாப் பார்த்த பேத்தியும் இப்ப அழகாத் தூக்கிக்கோன்னு கைகளைக் காட்டுகிறாள்.
துபாயில் வீட்டுக்கு எதிர்த்தாப்பில் மெட்ரோ அநேகமாக முடியும் தருவாயில் இருக்கிறது.
.
இரவெல்லாம் வேலை நடக்கிறது.சென்னை நிலவரங்களை அறிய சன் தொலைக்காட்சியும் ஜெயா டிவியும் இருக்கிறார்கள்.
ஏதாவது கண் கொண்டு பார்க்க முடிந்தால் தானே.
எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு.
பிறகு எல்லாம் பழகிவிடும்.:(

இங்கே இந்த ஊரில் ரிசெஷன் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்பார்கள் போலிருக்கிறது.
இன்னும் வாகனங்கள் பெருகிவிட்டன. அதே வேகத்தோடு வண்டி ஓட்டுகிறார்கள்.

வந்திறங்கிய அன்று நமது அண்டைய நாட்டிலிருந்து புத்தம் புதிய ஸ்வெட்டர்,கால் செருப்பு இத்தியாதிகளுடன் 40,50 இளைஞர்கள்
அவர்களது மேஸ்திரியின் காவலில் விமானநிலையத்தின் வாயிலில் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர் கண்களிலும் ஒரு மருட்சி கலந்த அதிசயம் தெரிந்தது.
இவர்கள் எல்லாம் எப்போது வீடு திரும்புவார்களோ என்ற நினைப்பு சூழ்ந்தது என்னை.

அடுத்தடுத்து நிறைய இந்த உழைப்பாளிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும் பி.பி.சியில் நடந்த உரையாடல் ஒன்றில்,
உழைப்பாளர்களின் கேள்விகளுக்கு, அதிகாரி ஒருவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தார்.
எங்களுக்குத்
தொழிலாளிகள் தேவை. அவர்களுக்குப் பணம் தேவை. அதுவரை இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாறும்.
பணம்,பணம்,பணம். இதுவே மந்திரம்.

போன வாரம் இங்கே நடந்தேறிய ஒரு திறப்புவிழாவில மூன்று மில்லியன் டிர்ஹம் செலவு செய்து வாண வேடிக்கை காண்பித்தார்கள்.
அது இங்கே திறக்கப்படும் அட்லாந்டிஸ் என்ற ஒரு வியாபாரத்தலத்துக்கான விழா.
அது சிஎனென் என்று எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கு வந்ததற்குப் புதிய பதிவர் அறிமுகம் கிடைத்தது. அவர் பெயர் சுந்தரா.
நெல்லையைச் சேர்ந்தவர். ஒரு நெல்லைச் சங்கம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.
என்னைத் தவிர எனக்குத் தெரிந்து கொத்ஸ்,அம்பி,ராமலக்ஷ்மி,நானானி எல்லோரும் இருக்கிறார்கள். எனக்குத் தெரியாதவர்களும் இன்னு ம் நிறைய இருக்கலாம்:) இருக்கிறார்கள்.

மதுரக்காரங்களுக்கு யூனியன் இருக்கு. மாயவரக்காரங்களுக்கும் இருக்கு. திருவண்ணாமலைலிருந்து ஒரு பெரிய மக்கள் கூட்டமே இருக்கு.
நெல்லைக்கு மட்டும் வேண்டாமா. யோசிச்சு சொல்லுங்கப்பா.
இங்க வந்ததும் பாதி சுதந்திரம் கிடைத்துவிட்டது சிங்கத்துக்கு.
மாலையில் சரவணபவன் காப்பி. ''சார் வந்துட்டார்'' லெவலில் அங்கே எல்லோரிடமும் நட்பு. அப்படியே தமிழ்ச்சந்தையிலிருந்து எனக்கு வேண்டும் என்கிற கு,கு,ஆவி,கல்கி எல்லாம் வரும்.
நம் நிலாரசிகன் கவிதை வந்த விகடனும் பார்த்தாகிவிட்டது.

இன்னும் பத்து நாட்களில் கிளம்பி சென்னை சென்றுவிடலாம்.
குழந்தைகளிடமிருந்து தனிமைப் படுத்தப் பட்ட உணர்வு வரும்.
அதனாலென்ன. ஒரு பட்டன் தட்டு. நேரிலியே பார்த்து உரையாடலாம்.
தாத்தாதான் பேத்திக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்.
நான் வெளி வராந்தாவில் ஈரமான தலைமுடியை உலர்த்திக் கொண்டிருந்தால்,
அவர் கண்ணாடி வழியே
'அதோ பார்த்தியா புறா. பக்கத்தில பார்த்தியா லேடி அந்நியன்;; என்று கேலி காட்டுகிறார்.
நான் தலைமுடி கட்டாமல் தட்டுவது அவளுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறது.:)

Wednesday, November 19, 2008

இது ஒரு பதிவு!

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்னு ஒரு பதிவு போடணும்னு நினைத்தேன்.


ஏதாவது யோசனை தோணினால் தானே எழுத.
நல்லதாப் போச்சு எல்லார் சொல்கிற மாதிரி நாமும் உண்மையாவே எழுத்தாளி ஆகிட்டோம் போலிருக்கு. இந்த மெண்டல் ப்ளாக் வந்திடுத்து.
மெண்டல் ப்ளாக் வந்தால் கட்டாயம் நாம் எழுத்தாளர் என்பது லாஜிக்.


அதாவது தலைவலின்னு ஒண்ணு வந்தால் தலை இருக்கு என்பது நிதர்சனம்,
ஒண்ணு இருக்கு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அது இல்லாமல் மேல ஒண்ணும் நடக்காது என்று சொல்லணும்.
அதே போல முதிய பதிவாளர் என்றால் அப்பப்போ உணர்ச்சிகரமா ஏதாவது எழுதவேண்டும்.(என்னை மாதிரி)
வர்த்தி ஏத்தவேணும். அதாவது கொசுவர்த்தி. (அதே என்னை மாதிரி)
கவிதை எழுதலாம்.அநேகமா அது உரைநடைல இருக்கணும்.
ஐயோ ஏன் இந்த அம்மா இப்படி வதைக்கிறாங்கன்னு நாலு பேராவது நினைக்கணும்.

பந்தபாசம்,படிக்காத மேதை, கணவனே கண் கண்ட தெய்வம் ,பொன்னித் திருநாள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் இந்த மாதிரி புதுப் படங்களுக்கு ரெவ்யூ எழுதலாம். பழசுக்கு எப்பவும் மதிப்பு இல்லையா.

இதெல்லாம் இந்த துபாய்க்கு வந்த பிறகு எனக்குத் தோன்றிய எண்ணங்கள்.
சிகாகோ குளிருக்குப் பயந்து இங்கே வந்தால், இங்க வீட்டுக்குள்ள குளிருகிறது.



வெளியில் நல்லா இருக்கிறது.

வெளி வராந்தாவை சிங்கம் குத்தகை எடுத்து விட்டதால், வீட்டுக்குள்ள ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு, என்னடா எனக்கு வந்த சோதனைன்னு யோசித்தேன்.


பாப்பா தூங்கின பிறகு வாங்கி வைத்திருக்கும் குங்குமம்,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.


உள்குளிர் நம்மளை வெளியில் தள்ளினாலும், ஏற்கனவே நமக்கு அனுபவம் இருப்பதால் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.



ஆகக்கூடி செய்ய வேண்டிய ஒரே கடமை,
அரபு நாடுகளுக்கு ,அமீரகத்துக்கு நாம் விஜயம் செய்யும் விஷயத்தை ஒரு பதிவாப் போட்டுடலாம்


அப்புறம்,மொக்கை பதிவே போடாத நல்ல பதிவர்களின் அர்த்தமுள்ள பதிவுகளைப் படித்துத் தேறி, அறிந்த தெரிந்த விஷயங்களை எழுத வேண்டியதுதான்.
அமீரகப் பதிவர்களுக்கு என் வணக்கம்.:)

Tuesday, November 11, 2008

அமெரிக்கப் பதிவர்களுக்கு பை பை

இந்தக் காட்சி கண்ணில பட்டுக் குளிர் எடுக்கும்முன்னால் கிளம்புகிறோம்.


வாய்ப்பிருந்தால் மீடுன் பார்க்கலாம்.






கண் கொண்ட அளவு காட்சிகள்,
நயாகரா,
ஸெயிண்ட் லூயிஸ் நகரம்,
பக்கத்தில் இருக்கும் உள்ளூர்க்காட்சிகள்,
கோவில்கள்
எல்லாம் போய் வந்தாச்சு.
இனி கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.
பொட்டிக்கு ஐம்பத்தொன்று பவுண்டு ஏற்றி நாலு பெட்டிகளும் தயார்.
சின்னப் பேரன் இன்னிக்குப் போயிட்டு நாளைக்கு வான்னு சொல்லிட்டான்.
வெள்ளாடணூமே' அவன் கவலை அவனுக்கு:)
ஆதலால் சக பதிவர்களிடம் விடை பெறுகிறேன்.
முயற்சித்திருந்தால் பார்த்துப் பேசி இருக்கலாமோ.
தெரியவில்லை.
எழுத்துதானே நமக்கு சங்கிலி.
அது வழியாகவே
பேச்சும் தொட்ர்பும்,ஆரம்பமாகி முடிகிறது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
குறையில்லாமல் இருக்க என் பிரார்த்தனைகள்.
போய் வருகிறோம்.