Blog Archive

Tuesday, March 13, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும்.7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 லிஸ்ட் போட்டு முடிந்ததும், 

அரைத்த மாவை வழித்து வைக்கும் அக்கா,தங்கையைப் பார்த்தார்

ஜயம்மா. இந்தத் தடவை கூழ் கிளறத் தானும் கீதுவும் போதும் 

என்று தீர்மானித்தவராய்,

அவர்களை அழைத்து ஆளுக்கு ஒரு டம்ப்ளர் பால் சாப்பிட்டுவிட்டு 

வீட்டுக்குப் போங்கோ.மேகம் கூடறது.

கார்த்தால விடிஞ்சு வாங்கோ. மழைக்கு முன்னால கிளம்புங்கோன்னு

 முடிக்கு முன்னால் இடி ஒலி கேட்டதும்,

பாலைக் குடித்துவிட்டு சகோதரிகள் விரைந்தனர்,.

பாண்டியன் சைக்கிள் ரிக்ஷா வாசலில் இருக்கு. சீக்கிரம் போய் இறங்கிக்கோங்கோ. 

பஸ்ஸிற்குக் காக்க வேண்டாம் என்று அனுப்பினார்.

நான் அவனுக்குப் பணம் கொடுத்துக்கறேன். வாசலுக்கு வந்து 

,பாண்டியனிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.

சர சரவென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

சரி,மாடித் தரை எல்லாம் படு சுத்தம் ஆகிடும்.

 நாம  கூழ் கிளற ஆரம்பிக்கலாம் என்று கீதுவை அழைத்தாள். 

காஸ் அடுப்பைக் கீழே இறக்கி  பெரிய பித்தளை அடுக்குகளை அடுப்பில் ஏற்றிப் போது மான தண்ணீரையும்  விட்டாள்.

மழை சத்தம் அதிகமாகியது. 

சட்டென்று நினைவு வர சீனு அந்த அரை ட்ரம் இரண்டையும் மழைஜலம் பிடிக்க வையப்பா. திடீர்னு கார்ப்பரேஷன் ஜலம் வரலைன்னால், பாத்திரம் தேய்க்க உதவும் என்று சொன்னதும் சீனுவும் செய்தான்.

சரியான அஷ்டாவதனி உங்க மன்னி என்று சீனு கேலி காட்டினார்.


சொல்ல மாட்டேளா, என் வேலை,பொறுப்பு எனக்கு.  நீங்க

உங்க பணக்கணக்கைப் பாருங்கோ. லஸ் பிள்ளையாருக்குத்

 தேங்காய் உடைக்க வேண்டிக்கிறேன்.,

என்றபடி முடிச்சுப் போட்டுக் கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் , கூழ் கிளறி முடித்தாச்சு. ஆறட்டும்.

 மோர், பெருங்காயம்,உப்பு, பச்சை மிளகாய் அரைத்து போட்டுக் 

கலக்கி வைத்துவிட்டால் சீக்கிரம் படுத்துக் கொள்ளலாம்.

 மணி எட்டாறது. சாப்பிடலாமா என்ற படி , 

சரகு இலைகளை எடுத்து வைத்தாள்.

முகம் ,கை கால் அலம்பிக்கொண்டு அனைவரும் உட்கார

சுற்றி உட்கார்ந்து காலையில் சகோதரிகள் தயாரித்த 

வத்தல் குழம்பு,கீரை மசியல், காய்ச்சின அப்பளம்

போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். ஆளுக்கொரு டம்ப்ளர் மோருடன்

சாப்பாடு முடிந்தது.

9 மணிவாக்கில் கிளறிய கூழுடன், அரைத்த பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் 

உடன் கணிசமான அளவு கெட்டி மோரையும் சேர்த்தார் ஜயம்மா. 

இது அவர் செய்யும் முறை.

 நாளைக்கு காய்கறி இருக்கோ. அந்தக் குழந்தைகளுக்கு லகு வா சமைக்கிற மாதிரி

சீரா ரசமும், அவரைக்காய் கூட்டும்  செய்து கொள்ளட்டும் என்றபடி

பாயை விரித்துக் கொண்டார். மழ நிக்கட்டும் பிள்ளையாரப்பா என்று சொன்னவர் 

அடுத்த நிமிடம் தூங்கியாச்சு. எல்லாம் சாத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு

சீனுவும்,மாதுவும் படுத்துக் கொண்டார்கள்.

பனிரண்டு மணி வாக்கில் மழையும் நின்றது....தொடரும்.

Add caption

9 comments:

ஸ்ரீராம். said...

மழை நிற்காவிட்டால் என்ன ஆவது!

வல்லிசிம்ஹன் said...

மழை நிற்காவிட்டால் இருக்கவே இருக்கிறது மேஜை. அலுமினிய தட்டுகள். தாம்பாளங்கள்,
பாய். மேலே மின்விசிறியைச் சுழல விட்டு கீழே வடாம் வேஷ்டியை விரித்தால் ஆச்சு காரியம். ஸ்ரீராம் நான் இதை எல்லாம் செய்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

வெயிலில் வைக்காவிட்டால் அது ஒருமாதிரி வாசனை வந்து விடாதோஅம்மா?

வல்லிசிம்ஹன் said...

வெய்யில் அடுத்த நாளாவது வருமே ஸ்ரீராம். NO WORRIES.

நெல்லைத் தமிழன் said...

இதையெல்லாம் படிக்கும்போதே 'வத்தக்கூழ்' வாசனையும் வடாம் இடும் பாய்/துணி போன்றவையும் மனதில் வந்துபோகிறது. நல்லா எழுதியிருக்கீங்க.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெ.த. எழுதும்போதே பழைய
நாட்களின் வாசனை வருகிறது.
வலிமை நிறைந்த நாட்கள். குழந்தைகளின் அருகாமை.
எல்லாமே பெருமாள் கொடுத்த வரம்.
இப்பொழுது எழுத முடிகிறது. பதிந்து விடலாம் என்ற தீர்மானம். நன்றி மா.

கோமதி அரசு said...

கூழ் வத்தல் போடும் போது மழை வந்து மொட்டை மாடி போய் ஓடி போய் எடுத்து வந்து நாள் முழுவதும் மின்விசிறியில் காய்ந்ததும் மறுதாள் நல்ல மழை பெய்து காய்ந்து விட்டதும் நினைவுக்கு வருது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, எல்லோருக்கும் இந்த மழை வில்லனாக வருகிறது பார்த்தீர்களா.
அந்த மாடிப்படிகளை இப்போது பார்த்தால்
பிரமிப்பா இருக்கிறது. இதிலியா ஓடினோம் என்றிருக்கிறது.
வீடே பெருங்காய வாசம் தூக்கும். இனிமையான நாட்கள்.
வாழ்க வளமுடன் மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா!! வல்லிம்மா போன முறை நான் வடாம் வற்றல் போட்ட போது இப்படித்தான் வானத்தை நம்பிப் போட்டு வேஷ்டித் துணியில் இட்டும் ஆயாச்சு.....மழை!!! வெயில் இல்லை...உடனே அனைத்தையும் மின் விசிறியின் கீழ் உலர்த்தி எடுத்துவிட்டேன்....என்ன கூட கொஞ்சம் நாள் ஆச்சு...அந்த இரண்டு நாட்கள் ஓய்ந்து 3 வது நாள் வெயில் வந்ததும் வடாம் எல்லாம் வேஷ்டியில் இருந்து பிரிச்சு தட்டில் வைத்திருந்ததால் வெயிலில் காய வைத்து எடுத்துவிட்டேன்....நன்றாகவே வந்தது....

இன்று இலை வடாமுக்கு அரிசி ஊற வைச்சுருக்கேன்....இன்னும் கொஞ்ச நேரத்தில் அரைத்து வைக்கணும்....கொஞ்சம் புளிக்கணுமே....அப்புறம் இது மெலிதாக தோசை வார்ப்பது போல் எழுதணும்....ஆனால் எனக்கு வெளியில் இலை வடாம் வாங்குவது பிடிப்பதில்லை....கனமாகத் தேய்க்கிறார்கள். எனவே நான் வீட்டில் தான்....செய்வது மிக எளிது....நான் மிக மிக மெலிதாக இடுவேன்....வெந்ததும் சாப்பிடவும் நன்றாக இருக்கும் உப்பு காரம் பெருங்காய மணத்துடன்...எங்க வீட்டுல அப்படியே சாப்பிடவும் பிடிக்குமா...அதனால நிறைய போடனூம்...இன்று கொஞ்சம் தான் ஒரு ஆழாக்குதான் ஊற வைத்துள்ளேன்...இதுவே வரும்...அடுத்தடுத்து செய்யலாம் என்று...

கீதா